டிரம்ப் மீதான ட்விட்டர் தடை நீக்கப்படும்..!! எலான் மஸ்க் அறிவிப்பு..!!

டிரம்ப் மீதான ட்விட்டர் தடை நீக்கப்படும்..!! எலான் மஸ்க் அறிவிப்பு..!!;

Update: 2022-05-11 12:32 GMT

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய ட்விட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ட்விட்டரை பயன்படுத்த டொனால்ட் டிரம்பிற்கு ஒரு போதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறி இருந்தார்.

இந்த சூழலில் தடை செய்யப்பட்ட அவரது ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்ப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் ட்விட்டரை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடித்து வந்தது.

இதனிடையே, உலக பணக்காரர்ரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம்  செய்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் என டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News