ஹிந்தி படத்தை வெளியிடும் உதயநிதி.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!
ஹிந்தி படத்தை வெளியிடும் உதயநிதி.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!
தமிழகத்தில், திமுக ஆட்சி அமைந்த பின்பு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்த் திரையுலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கேற்றாற் போல, கடந்த சில மாதங்களில் மாதத்திற்கு ஒரு படத்தையாவது அந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் டப்பிங்கை தமிழகம் முழுவதும் வெளியிடுவதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.
‘ஹிந்தியை எதிர்த்து தீவிரமாக செயல்படும் கட்சி என தன்னை சொல்லிக் கொள்ளும் கட்சியின் முக்கிய வாரிசு இப்படி ஒரு ஹிந்திப் படத்தை வெளியிடலாமா..?’ என, சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
‘லால் சிங் சத்தா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படமும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வாங்கியுள்ளது.
ஒரு தமிழ்ப் படத்திற்கு போட்டியாக அவர்களே ஒரு ஹிந்தி படத்தையும் வெளியிடுவது திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு படங்கள் மட்டுமே அன்றைய தினம் தமிழகத் தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் என்கிறார்கள்.
இதனால், ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள விஷாலின் ‘லத்தி’ படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.