உஷார்! வேலை தேடும் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் கும்பல்!!
உஷார்! வேலை தேடும் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் கும்பல்!!
சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கோயம்பேடு, சின்மயா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய இளவரசன் (28), பரத்குமார் (37), ராஜ்குமார். (30), அம்பரீஷ் (24), சூரஜ் (27), திருப்பதி (28), சீனிவாசன் (60) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
மேலும் சோதனை மேற்கொண்ட இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 5 பெண்களும் மீட்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 7 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 5 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
newstm.in