காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை.. காரணம் சொல்கிறார் அமைச்சர் கே.என்.நேரு..!
காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை.. காரணம் சொல்கிறார் அமைச்சர் கே.என்.நேரு..!
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளையும் அப்போதைய அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
கடந்த ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த ஆண்டும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதனைக் கொண்டு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அவசர பணிகள் மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தற்போது தமிழக அரசு மிகப் பெரிய நிதி சுமையில் உள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிகிறது
இருந்தபோதிலும், தமிழக அரசு மிகப்பெரிய நிதிச் சுமையில் உள்ளதால் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதிச் சுமை சீரானதும் அது பற்றி பரிசீலனை செய்து, தேவையான இடங்களில் பணியாளர் நிரப்பப்படும்,
இதற்கிடையில், தேவையான இடங்களில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கருத்துரிமை கோரப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று தெரிவித்தார்.