காதலர் தினம்.. கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு போலீஸ் கடும் உத்தரவு !!
காதலர் தினம்.. கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு போலீஸ் கடும் உத்தரவு !!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகள் வழங்கியும், பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வது வழக்கம்.
அந்தவகையில் நாளை (பிப்.14) காதலர் தினம் என்பதால், அதை சிறப்பாக கொண்டாடும் விதமாக காதல் ஜோடிகள் இப்போதே பரிசு பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தில், கன்னியாகுமரி கடற்கரை சர்வதேச சுற்றுலா தலம் என்பதால் அங்கு விதவிதமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுவது வழக்கம். எனவே இன்று காலை முதல் ஏராளமான காதல் ஜோடிகள் கடற்கரைக்கு வந்து பரிசு பொருட்களை வாங்கியபடி உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள சங்கு வியாபாரிகளிடம் வந்து, தங்களது ஜோடிகளின் பெயர்களை சங்குகளில் எழுதி வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரே அரிசியில் காதலன், காதலி ஆகியோர் பெயர்களை பல ஜோடிகள் எழுதி வாங்கி சென்றபடி உள்ளனர்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் வெளியூர்களில் இருந்து ஏராளமான காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் குவிய தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக காதலர் தினம் கொண்டாட்ட உற்சாகத்தில் அசம்பாவிதங்கள் எதும் நடக்காமல் இருக்க கன்னியாகுமரி கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேசமயம் காதலர் தின உற்சாகத்தில் கன்னியாகுமரி கடற்கரையில் மறைவான இடங்களுக்கு சென்று அத்துமீறும் காதல் ஜோடிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கத்தைவிட அதிகளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
newstm.in