சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் உயிரிழப்பு!!

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் உயிரிழப்பு!!

Update: 2022-05-25 21:28 GMT

வீரப்பனின் அண்ணன் மாதையன் (75). கடந்த 1987-ம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக போலீசாரால் ஒரு வழக்கில் மாதையன் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் கோவை மத்திய சிறைக்கும், அதன்பிறகு சேலம் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்ட இவர், கடந்த 7 ஆண்டுகளாக இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாதையன், அவ்வப்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார். இதனால் அவருக்கு சிறை அதிகாரிகள் பரோல் வழங்கி வந்தனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி மாதையன் நெஞ்சுவலி காரணமாக சேலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, மாதையனின் மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாதையனின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Similar News