பெண்களுக்கு 3 முறை திருமணம் செய்து வைக்கும் கிராமம்..!

பெண்களுக்கு 3 முறை திருமணம் செய்து வைக்கும் கிராமம்..!

Update: 2022-05-13 11:29 GMT

ஆந்திரா - ஒடிசா எல்லையில் வாழும் மாலிஸ் பழங்குடி இனத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மூன்று முறை திருமணம் நடத்தி வைக்கும் சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்படி, அவர்கள் ஐந்து வயது நிறைவடைவதற்கு முன்பாக ஒரு முறையும், வயதுக்கு வந்த பிறகு ஒரு முறையும் திருமணங்கள் செய்து வைக்கப்படும்.


ஆனால், இந்த இரண்டு திருமணங்களிலும் மணமகன் இருக்கமாட்டார். ஆனால், அவை திருமணங்கள் என்றே சொல்லப்படுகிறது. மூன்றாவது முறையாக நடைபெறும் திருமணத்தில் மட்டுமே மணமகன் இருப்பார்.

ஐந்து வயது திருமணத்தை நடத்த ஊர் பெரியவர்கள் ஒரு தேதியை முடிவு செய்கிறார்கள். கிராமத்தில் அனைவரும் ஒப்புக் கொண்டால் முகூர்த்தம் முடிவு செய்யப்படுகிறது. அப்போதிலிருந்து கொண்டாட்டம் தொடங்கிவிடும்.

இரண்டு திருமணங்களுக்கு பிறகு மூன்றாவதாக மணமகனுடன் செய்யும் திருமணத்தின்போது மாப்பிள்ளையை பெண்கள்தான் தேர்வு செய்கிறார்கள்.

அந்தப் பெண் யாரையாவது விரும்பினால் அவருடன் திருமணம் செய்து வைக்கப்படும். அல்லது பெரியவர்கள் சேர்ந்து ஒரு மணமகனை தேர்ந்தெடுப்பர்.

முதல் இரண்டு திருமணங்கள் குழுக்களாக கொண்டாடப்படும். கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த திருமணங்கள் செய்யப்படும். மாப்பிள்ளை இல்லாமல் நடக்கும் திருமணம் என்றாலும் கிராமம் முழுவதும் ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

Similar News