மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா எதற்கு? : செல்லூர் ராஜூ காட்டம்!!

மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா எதற்கு? : செல்லூர் ராஜூ காட்டம்!!;

Update: 2022-07-26 08:11 GMT

மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா எதற்கு என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏவுமான செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சுமார் 500 தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய செல்லூர் ராஜூ, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு மோசமான மாநிலம் தமிழ்நாடு என்று சர்வே சொல்கிறது. இது வேதனையாக உள்ளது என்றார்.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் லெஜன்ட் சரவணா போல கோட்டு, சூட்டு போட்டுக்கொண்டு நடந்து வந்து ஸ்டாலின் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். சீன அதிபர் உடனான சந்திப்பின் போது வேஷ்டி கட்டிக்கொண்டு வந்த மோடி தான் உண்மையான தமிழர் என்று கூறினார்.

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அனிதா இறந்த போது அவ்வளவு விமர்சனம் செய்து போராடியவர்கள், இப்போது எங்கே போனார்கள், திருமா, வைகோ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் யாரையுமே காணோமே என்று விமர்சித்தார்.

தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்த நாங்கள் தான் என சிலர் (பாஜக) சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதை பொய்யாக்கும் வகையில் ஆர்பாட்டம் உள்ளதாக கூறிய அவர், தமிழகத்தின் ஒரே எதிர்கட்சி அதிமுக தான் என்றார். மேலும், மக்கள் கடனில் தவிக்கும் போதும், கடலில் பேனா எதற்கு என்றும் விமர்சித்தார்.

newstm.in

Similar News