கணவனை தேடிய மனைவி.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!!
கணவனை தேடிய மனைவி.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!!
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கெங்கமுத்து (35). ஒலிபெருக்கி அமைப்பாளராக வேலைபார்த்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி முதல் கெங்கமுத்துவை காணவில்லை. இதையடுத்து அவரது மனைவி சரிதா மற்றும் உறவினர்கள் கெங்கமுத்துவை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் எலவனாசூர்கோட்டை பகுதியில் உள்ள அக்னி காளி கோவிலுக்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் குவிந்த பக்கதர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் அந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது, இறந்து கிடந்த நபர் கெங்கமுத்து என்பது தெரியவந்தது. மேலும் அவரின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கெங்கமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த கெங்கமுத்துவின் உடலில் காயம் இருந்ததால் அவரை யாரேனும் அடித்துக் கொலைசெய்து, கிணற்றில் வீசி விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல்போன ஒலிபெருக்கி அமைப்பாளர் 4 நாட்களுக்குப் பிறகு உடல் அழுகிய நிலையில் கோவில் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.