தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் பதில்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் பதில்
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. இது குறித்து தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல.
அதேவேளை கொரோனா வைரசை தனிமனித இடைவேளை, முகக்கவசம், தடுப்பூசி உள்ளிட்டவை மூலம் நாம் வென்றோம். அதை நினைவூட்டுவதற்கான நேரம் இது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து யுக்திகளும் நம்மிடமே உள்ளது. அதை நாம் பயன்படுத்துவதை தவறிவிட்டோம். அதை மீண்டும் பயன்படுத்தவேண்டும். முகக்கவசம், தடுப்பூசி ஆகியவை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான யுக்திகள். மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றவேண்டும்” என்றார்.