டேங்க் ஃபுல் பண்ணுனா வாகனம் வெடிக்குமா..?: இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்..!
டேங்க் ஃபுல் பண்ணுனா வாகனம் வெடிக்குமா..?: இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்..!
இந்தியன் ஆயிலின் எச்சரிக்கை என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவுகிறது. அதில், ‘கோடைக்காலத்தில் தினசரி ஒரு முறை எரிபொருள் டேங்கை திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள வாயு வெளியேறும். வரும் நாட்களில் வெப்பநிலை உயர உள்ளது.
எனவே, எரிபொருள் டேங்கை முழுவதுமாக நிரப்பாதீர்கள். இதனால் எரிபொருள் டேங்க் வெடித்து விடும். அரை டேங்க் நிரப்பி, உள்ளே காற்றுக்கு இடமளியுங்கள். இந்த வாரத்தில் மட்டும் எரிபொருளை முழுவதுமாக நிரப்பியதால் 5 விபத்துகள் நடந்துள்ளன’ எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கோடை காலம் தொடங்கியதும் இந்த தகவல் பரப்பப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தியன் ஆயில் என தலைப்பில் போடப்பட்டிருப்பதால் பலரும் இதை நம்பி விடுகின்றனர். இத்தகவலை 2018-ம் ஆண்டுகளிலேயே இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்து, தனது சமூக ஊடக பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், ‘முழு கொள்ளளவு எரிபொருள் நிரப்பினால் வெடி விபத்து ஏற்படும் என்பது அடிப்படை ஆதாரமற்றது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் குளிர்காலம், கோடை காலம் என அனைத்து பருவநிலைக்கும் ஏற்ற வகையில், பாதுகாப்புடன் தான் எரிபொருள் கொள்கலனை வடிவமைக்கின்றனர். எனவே, முழுவதுமாக எரிபொருள் நிரப்புவது பாதுகாப்பானது தான்’ எனக் கூறியுள்ளது.