உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு..!
உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு..!
உத்தரப் பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன், 2 துணை முதல்வர்கள், அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், பாஜக கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றியது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பாஜக மேலிடம் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து, லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடந்த விழாவில், இரண்டாவது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து கேசவ பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதாக் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அனுராக் சிங் தாகூர், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர் நட்டா, குஜராத், ஹரியானா, உத்தர்கண்ட், கோவா மாநில முதல்வர்கள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.