உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. அழைக்கிறார் மாவட்ட கலெக்டர்..!
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. அழைக்கிறார் மாவட்ட கலெக்டர்..!
“வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற அணுகலாம்” என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி, 12-ம் வகுப்பு, பட்டயப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம்.
மேலும், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், சுய வேலை வாய்ப்பில் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருப்பவர் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுடையவராவார்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சென்னை, சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உரிய விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் தேவையான விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.