பிரபல நடிகருடன் சபரிமலையில் இளம்பெண் தரிசனம்!?
பிரபல நடிகருடன் சபரிமலையில் இளம்பெண் தரிசனம்!?
சபரிமலையில் இளம் பெண் ஒருவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியுடன், சுவாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து திருவாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
சபரிமலை கோயிலின் கருவறைக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்டது.
முன்னதாக, சபரிமலை கோயிலில் தரிசனத்துக்கு வந்த பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இளம் பெண் ஒருவருடன் சுவாமி தரிசனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. கடந்த 13ஆம் தேதியன்று சபரிமலையில் சிரஞ்சீவி தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருடன், பீனிக்ஸ் குரூப் உரிமையாளர்களான சுக்கப்பள்ளி சுரேஷ், அவரது மனைவி மதுமதி சுக்கப்பள்ளி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
50 வயதை எட்டாத மதுமதி என்பவரை தரிசனத்திற்கு அனுமதித்ததாக தகவல் பரவியது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுமதியின் மகன் சுக்கப்பள்ளி அவினாஷ், மதுமதி தனது தாயார் எனவும், அவர் 1966 ஆம் ஆண்டில் பிறந்தவர், தனக்கு வயது தற்போது 34 என விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுமதி என்பவர் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தது உண்மை. அவர் 1966ஆம் ஆண்டு பிறந்தவர். சபரிமலை ஆசார முறைப்படி அவர் 50 வயதை கடந்தவர்.
அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை பரிசோதனை செய்த பின்னரே அவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் தவறானது. தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
newstm.in