இந்தியாவில் பிறந்த பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் மரணம் !!

இந்தியாவில் பிறந்த பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை அப்துல் காதிர்கான் மரணம் !!

Update: 2021-10-10 19:45 GMT

இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அதற்கு போட்டியாக பாகிஸ்தானும் அணுகுண்டை உருவாக்கியது. இதற்கு காரணமாக இருந்தவர் அப்துல் காதிர்கான். அணு விஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணு குண்டை உருவாக்கினார். இதன் காரணமாக அவர் பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைக்கப்பட்டார்.

85 வயதான அப்துல் காதிர்கான் சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடினார். இஸ்லாமாபாத்தில் உள்ள கே.ஆர்.எல். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவை பலன் அளிக்காமல் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவரை பற்றி ஒரு தகவலை இங்கே குறிப்பிட வேண்டும். ஏனெனில் அப்துல் காதிர் கான் இந்தியாவில் பிறந்தவர் ஆவார். அதாவது, இந்தியாவில் பிறந்து, பாகிஸ்தானுக்கு குடிபெயரந்து அந்நாட்டின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்பட்டவர் அப்துல் காதிர். பிரிக்கப்படாத பாரத தேசத்தில் மத்தியப் பிரதேசம் தலைநகர் போபால் நகரில் கடந்த 1936ம் ஆண்டு பிறந்தவர் ஏ.கியூ.கான். அதன்பின் 1947ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினையின்போது, கான் குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.

பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவு செய்திகேட்டு மிகவும் துன்பப்பட்டேன். தேசத்துக்கு அணு ஆயுதத்தை வடிவமைத்த கானின் சேவை தேசத்தால் விரும்பப்பட்டது, தேசமும் அவரை நேசித்தது. அணுஆயுதத்தைவிட பெரிய ஆக்ரோஷமான அண்டை நாட்டினரிடம் இருந்து பாதுகாக்க கானின் சேவை உதவியது. பாகிஸ்தான் மக்களுக்கு அப்துல் காதிர் கான் மிகப்பெரிய அடையாளம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் அப்துல் காதிர் கான் அளித்த பேட்டியில், ராவல் பிண்டி நகலிருந்து வெறும் 5 நிமிடங்களில் டெல்லி தாக்கி அழிக்க முடியும் அதற்கான வல்லமை பாகிஸ்தான் அணு ஆயுதத்துக்கு இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.  


newstm.in

Tags:    

Similar News