போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது குவியும் பண மோசடி புகார்கள்!!

போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது குவியும் பண மோசடி புகார்கள்!!

Update: 2022-01-31 10:10 GMT

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி வலம் வந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (27) என்பவர், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என கூறிக் கொண்டு பல்வேறு இடங்களில் விசிட்டிங் கார்டை கொடுத்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுரவாயல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்த செய்தி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் வெளியானது. அதைத் தொடர்ந்து மதுரவாயல் காவல் நிலையத்திற்கு வந்த சிலர் கைது செய்யப்பட்ட சுபாஷ் தங்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்திருப்பதாக புகாரளித்தனர்.

மேலும் இவரது கூட்டாளியான பாஸ்கர் என்பவர் இவருக்கு உதவி வந்ததாகவும் தெரிவித்தனர். பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் தொடர்பான புகார்கள் எந்த பகுதியில் நடந்ததோ அங்கு புகார் அளிக்குமாறு மதுரவாயல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பணத்தை கொடுத்து ஏமாந்த பலரும் சுபாஷை நேரில் பார்த்ததில்லை என்றும், செல்போனில் மட்டுமே பேசியதாகவும் அவருக்கு முழுக்க முழுக்க பாஸ்கர் என்பவர் உறுதுணையாக இருந்து வந்ததாகவும் கூறினர்.

தங்களைப்போல் பாதிக்கப்பட்ட பலர் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Similar News