போலி கணக்கை முடக்கிய காவல் துறைக்கு நடிகர் சார்லி நன்றி..!
போலி கணக்கை முடக்கிய காவல் துறைக்கு நடிகர் சார்லி நன்றி..!
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நடிகர் சார்லி, தனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு துவங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சார்லி, “ட்விட்டர், முகநூல் போன்ற எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் நான் இதுவரை கணக்கு துவங்கவில்லை. எனது பெயரில் ட்விட்டரில் போலியான கணக்கு துவங்கப்பட்டுள்ளதாக நண்பர்கள் மூலம் அறிந்து, பார்த்தபோதுதான் எனக்கே தெரியும்.
என்னுடைய கணக்கு என நினைத்து பல்லாயிரக்கணக்கானோர் அதை பின் தொடர்ந்து வாழ்த்தி வரவேற்றிருப்பது தெரியவந்தது. மேலும், கடந்த 40 ஆண்டு காலமாக எனது துறை மட்டுமல்லாது எனது அன்பிற்குரிய பல்வேறு துறைகளைச் சார்ந்த அனைவரும் என்னுடன் நேரடித் தொடர்பில்தான் இருந்து வருகிறார்கள். ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதள கணக்குகளை நான் இதுவரை பயன்படுத்தும் அவசியம் வரவில்லை.
எனது நண்பர்கள் அறிவுறுத்தலின் பேரில், என் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கை துவங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். புகார் அளித்த உடனே சைபர் கிரைம் காவல் துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு எனது பெயரில் போலியாக துவங்கப்பட்ட ட்விட்டர் கணக்கை 30 நிமிடங்களில் தடை செய்து விட்டனர். அதற்காக சென்னை காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.