தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகன்தான் சிலம்பரசன். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2002 -ல் டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து கோவில்,மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம் என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.மேலும்,  கடந்த 2006 -ம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்தது.

நடிகர் சிலம்பரசனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அது போலவே நடிகர் சிலம்பரசனும் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த தன் ரசிகருக்காக கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டினார் சிலம்பரசன். தனது ரசிகர் மன்றத்தில் இருக்கும் தீவிர ரசிகர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுவது சிலம்பரசனின் வழக்கம். இதேபோல் பல்வேறு உதவிகளை அவர் புரிந்து வருகிறார்.

அந்த வகையில்  சிலம்பரசனின் ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக  இருக்கும் குட்லக் சதீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார். சிலம்பரசனுக்கு மிகவும் நெருக்கமான குட்லக் சதீஷின் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் மிகவும் உருக்கமான ஒரு கடிதத்தை பதிவிட்டுள்ளார். 

அதில், அன்புத் தம்பியும் காதல் அழிவதில்லை படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரனுமான குட்லக் சதீஷை அகாலத்தில் இழந்திருக்கிறேன்.உன்னை இழந்துவிட்டதை நம்பமுடியாமல் தவிக்கிறேன். உன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன்.நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டு விட்டாய். போய் வா சகோதரா. அழுகையோடு வழியனுப்பி வைக்கிறேன் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.


 


 

Tags: