“ரூ.50 கோடி செலவு செய்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது” : சி.வி.சண்முகம் அதிரடி!!
“ரூ.50 கோடி செலவு செய்தாலும் அதிமுக வெற்றி பெற முடியாது” : சி.வி.சண்முகம் அதிரடி!!
அதிமுகவில் கிளைக் கழகத்தை கட்டமைக்காவிட்டால் ரூ.50 கோடி செலவு செய்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசினார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சியின் அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் சிவி.சண்முகம், ஓஎஸ்.மணியன், ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், அமைப்பு தேர்தலில் கிளைக் கழகச் செயலாளர்களை ஒன்றிணைந்து செயல்பட்டு ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டும், பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
காலியாக உள்ள இடங்களை புதிதாக உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இன்னும் நமக்கு சட்டமன்ற தேர்தலுக்கு 4.5 ஆண்டுகளும், எம்பி தேர்தலுக்கு 2 ஆண்டுகளும் உள்ளது. மக்கள் மனதில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி தான் நமக்கு நல்லது செய்வார்கள் என நினைத்து வாக்களிப்பார்கள்.
ஆனால் எம்எல்ஏ, எம்பி தேர்தலில் மக்கள் ஆளுங்கட்சியின் மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தி நமக்கு தான் வாக்களிப்பார்கள், ஊராட்சி கிளை கழகத்தை வலுப்படுத்தினால் தான் நமது அமைப்பு வலுவான நிலையில் இருக்கும்.
கிளைக் கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும். இல்லையென்றால் 50 கோடி கொடுத்தாலும், ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்று பேசினார்.
newstm.in