சொமேட்டோ விளம்பரத் தூதர் பணியிலிருந்து விலகுகிறாரா அனிருத்?
சொமேட்டோ விளம்பரத் தூதர் பணியிலிருந்து விலகுகிறாரா அனிருத்?
சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையப் பணியாளர் ”இந்தியாவின் தேசிய மொழி இந்தி” என்று கூறியதுடன் குறைந்தபட்ச இந்தியையாவது கற்றுக் கொள்ளவேண்டும் என அறிவுரை கூற, அந்த விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. கனிமொழி எம்.பி.யும் இந்தப் பிரச்சனை தொடர்பாக ட்வீட் செய்தார். பங்குச்சந்தையில் சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் மளமளவென்று சரியத் தொடங்கியது. உடனடியாக ஆங்கிலத்திலும், தமிழிலும் மன்னிப்பு கேட்டு விளக்கத்தை வெளியிட்டது சொமேட்டோ நிறுவனம்.
குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். #Hindi_Theriyathu_Poda (1/3)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 19, 2021
இந்த விளக்கத்தில் மாநில அளவிலான விளம்பரத்தூதராக அனிருத்தை நியமித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளது தான் இசையமைப்பாளர் அனிருத்தை சங்கடப்படுத்தியுள்ளதாம். தமிழ்நாட்டின் உயிர்ப்பிரச்சனையான இந்தி மொழி விவகாரத்தில் தன்னுடைய பெயர் இணைக்கப்பட்டு வந்தது சுத்தமாகப் பிடிக்கவில்லையாம்.
மேலும், மன்னிப்பு கேட்ட நிறுவனத்தின் முதலாளி ஆணவத்துடன் சகிப்புத்தன்மை குறித்து தமிழர்களுக்குப் பாடம் எடுத்ததால், இந்த விவகாரம் மேலும் பெரிதாக வெடித்துள்ளது. நிறுவனரின் பழைய இந்தித்திணிப்பு ட்வீட்கள் எல்லாம் வெளிவரத்த் தொடங்கியுள்ளது. இது நிறுவனம் திட்டமிட்டே இந்தி ஆதிக்கத்தை திணிக்கும் முயற்சி என்று தற்போது பேசப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் Zomato ஆப்களை மொபைலிலிருந்து நீக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் சொமேட்டோ நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராக நடித்தால், தனக்கும் அவப்பெயர் ஏற்படும் என்று நினைக்கிறாராம் அனிருத். ஒப்பந்தத்திலிருந்து விலகுவது குறித்த ஆலோசனையிலும் இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது. ஒரு வாடிக்கையாளர் சேவை மையப் பணியாளரின் செயல், இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிறுவன முதலாளி கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
அது தான் தமிழ்நாடு, தமிழர்களின் சுயமரியாதை, தாய்மொழிப் பற்றி! சரிதானே!