கைதான பாத்திமா பரபரப்பு வாக்குமூலம்.. 4 வயது சிறுவனை கொடூரமாக கொன்றது ஏன்..?

கைதான பாத்திமா பரபரப்பு வாக்குமூலம்.. 4 வயது சிறுவனை கொடூரமாக கொன்றது ஏன்..?

Update: 2022-01-25 05:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சர்ட். இவருடைய மகன் ஜோகன் ரிஷி (4) என்பவரை, ஒன்றரை பவுன் நகைக்காக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாத்திமா (30) என்பவர் கொலை செய்து பீரோவுக்குள் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாத்திமாவை கைது செய்தனர். அதே சமயத்தில் பாத்திமாவின் கணவர் சரோபினையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.


இந்நிலையில், கைதான பாத்திமா சிறுவனை கொன்றது ஏன்? என்பது குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், பாத்திமா குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

இந்தக் கடனை அடைக்க முடியாமல் அவர் சிரமப்பட்டுள்ளார். இதனால் கடன் கொடுத்த பெண், பாத்திமாவுக்கு நெருக்கடி கொடுத்தார். மேலும், பணம் தராவிட்டால் உன்னுடைய வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டலுக்கு பயந்த பாத்திமா, பணத்தை உடனடியாக திரட்டுவது எப்படி? என்று யோசித்தபடி இருந்துள்ளார். நமக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள்.

எனவே இதற்கு மாற்று வழி என்ன? என நினைத்து கொண்டிருந்தபோது, வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனிடம் நகையை பறித்தார்.

பின்னர் சிறுவனின் வாயை துணியால் கட்டி சத்தம் போடாதபடி செய்தார். பிறகு கை, கால்களை கட்டிய அவர், கழுத்தை கயிறால் இறுக்கி உள்ளார்.

பாதி உயிர் போன நிலையில், சிறுவனின் முகத்தில் தலையணையை போட்டு அதில் அவர் உட்கார்ந்து கொண்டார். பாத்திமாவின் ஈவு, இரக்கமற்ற கொலை வெறியில் சிறுவன் துடிதுடித்து இறந்தான்.

பின்னர், கொலையை மறைக்க அவர் திட்டமிட்டார். இதற்காக பீரோவுக்குள் உடலை வைத்து பூட்டினார். இரவு நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனின் உடலை கடலில் வீசி விட்டு, ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாட முடிவு செய்திருந்தார். ஆனால், இரவில் சிறுவனின் உறவினர்கள் வெளியே நின்றிருந்ததால் அவருடைய திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், மறுநாள் காலையில் சிறுவனிடம் பறித்த நகையை ஒரு வங்கியில் அடமானம் வைத்து பாத்திமா பணம் பெற்றார்.

இதை அறிந்த போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதற்கிடையே, கொலையை மறைக்க உதவியதாக பாத்திமாவின் கணவர் சரோபினையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News