மத ஊர்வலத்திற்கு தடை! போலீசாரை வெட்டி கலவரம்!
மத ஊர்வலத்திற்கு தடை! போலீசாரை வெட்டி கலவரம்!
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா அறியப்படுகிறது. இதனால் அங்கு மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாந்தேத் பகுதியில் குருத்வாரா சார்பில் ஊர்வலம் நடத்த காவல் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குருத்வாராவுக்குள் இருந்த 400க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த காவல்துறையின் தடுப்புகளையும் தூக்கி எறிந்தனர். சீக்கியர்கள் கைகளில் வைத்திருந்த வாட்களால் போலீசாரை சரமாரியாக வெட்டிய கலவரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பாதுகாவலர் உட்பட 4 காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் நிகழ்ந்த சேதங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.