ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருங்கள்… : நடிகர் விஜய்க்கு ஐகோர்ட் குட்டு..!
ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருங்கள்… : நடிகர் விஜய்க்கு ஐகோர்ட் குட்டு..!
தமிழ்நாட்டில், நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது” என, நடிகர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கியது.
நடிகர் விஜய் 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை.
இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிகவரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும், வரி விதிக்க தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், “மனுதாரர், தான் என்ன தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை. மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் மனுதாரர் நடிகர் என்று குறிப்பிட்டார்.
புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை.
மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது.
சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரி ஏய்ப்பைச் செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது; வரிஏய்ப்பு என்பது தேசத் துரோகம். இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும்” என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டார்.
அத்துடன், நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.