#BREAKING:- நெல்லையில் சோகம்..! பள்ளி சுவர் இடிந்து விபத்து.. 3 மாணவர்கள் பலி..!
#BREAKING:- நெல்லையில் சோகம்..! பள்ளி சுவர் இடிந்து விபத்து.. 3 மாணவர்கள் பலி..!
நெல்லையில், தனியார் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
நெல்லை டவுண் செல்லும் சாலையில் உள்ளது சாப்டர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது, கழிப்பறை கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து உள்ளது.
இதில், எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகிய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் மிகுந்த கோபத்துடன் பள்ளியில் கற்களை கொண்டு வீசியும், பள்ளியில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தினர்.
இது குறித்து சில மாணவர்கள் கூறுகையில், ‘மாணவர்கள் சிலர் சுவரை பலமாக எட்டி உதைத்தனர். அதில்தான் சுவர் உடைந்தது’ என்றனர். விபத்து குறித்து பேசிய மற்றொரு மாணவர், சுவர் வலுவிழந்து இருந்தது. அது சரியாக கட்டப்படவில்லை என தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.