#BREAKING இந்தியா 151 ரன்கள் சேர்ப்பு.. கோலி அபாரம்.. பாகிஸ்தான் பேட்டிங் எப்படி?
#BREAKING இந்தியா 151 ரன்கள் சேர்ப்பு.. கோலி அபாரம்.. பாகிஸ்தான் பேட்டிங் எப்படி?
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டி இதுவாகும். இன்றைய ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். பாகிஸ்தானின் ஷகீன் அப்ரிடி முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் ஷகீன் அப்ரிடி வீசிய 3ஆவது ஓவரின் முதல் பந்தில் கே.எல்.ராகுல் போல்ட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஹசன் அலி வீசிய 6-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். பவர்பிளே முடிவதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதன் பிறகு ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். இவர்கள் சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட்(39 ரன்கள்) ஷகத் கான் வீசிய பந்தை தூக்கி அடித்த போது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
இதனை தொடர்ந்து 18ஆவது ஓவரில் விராட் கோலி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஆண்கள் டி 20 உலகக்கோப்பையில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அடுத்துவந்த ஹர்த்திக் பாண்டியா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 20 ஓவர் முடிவில் 151 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தானில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்களையும் ஹஸன் அலி 2 விக்கெட்களையும் அதிகபட்சமாக கைப்பற்றினர். பாகிஸ்தானில் கேப்டன் பாபர், ரிஸ்வான் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் தற்போது பார்மில் உள்ளனர். எனினும் இந்தியாவிடம் வருண், ஜடேஜா, ஷமி கடும் அட்டாக் செய்யலாம் என்பதால் யார் வெற்றி என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
newstm.in