முதலீடு செய்ய வாங்க.. எலன் மஸ்கை அழைக்கிறார் தங்கம் தென்னரசு..!
முதலீடு செய்ய வாங்க.. எலன் மஸ்கை அழைக்கிறார் தங்கம் தென்னரசு..!
உலக அளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 7 வகையான மின்சார கார்களை விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிகிறது. எனினும், டெஸ்லா நிறுவனம் இறக்குமதி வரி சலுகை உள்ளிட்ட சலுகைகளை கோரி வருவதால், டெஸ்லா கார்கள் இந்தியாவில் கிடைப்பது கால தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் கிடைக்கும் என அதன் தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்கிடம் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அவர், இந்திய அரசிடம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு தொழில் தறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் மொத்த மின்சார வாகன உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 34 சதவிகிதமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரான தமிழகத்திற்கு எலான் மஸ்கை வரவேற்பதாக தெரிவித்துள்ள தங்கம் தென்னரசு, உலக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் 9-வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 300 ஏக்கர் பரப்பிலும், திருவள்ளூர் மாவட்டம் மணலூர் பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பிலும் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமைய இருப்பதையும் அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.