`காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்!'.. காதலர் தினத்தில் உயிரிழந்த இளம்பெண்!!
`காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்!'.. காதலர் தினத்தில் நேர்ந்த சோகம்..
காதலர் தினத்தில், காதலியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பைக் ஓட்டக் கொடுத்த சம்பவத்தில் காதலி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சேலம் அஸ்தம்பட்டி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி(19) இரண்டாம் ஆண்டு படிக்கும் பட்டதாரி ஆவார். ஆர்த்தியும் பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவர் அசோக்(21) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். ஆர்த்தி, பெங்களூருவில் பள்ளியில் படிக்கும்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. சமீபத்தில், 3 லட்ச ரூபாய் மதிப்பிலான கே.டி.எம் ரேஸ் பைக்கை அசோக் வாங்கியிருந்தார். அந்த பைக்கில், தனது காதலியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக அசோக் சேலம் வந்திருந்தார்.
பிறகு, அந்த ரேஸ் பைக்கில் ஆர்த்தியை அழைத்துக்கொண்டு பெங்களூருவுக்குச் சென்றார். சேலம் ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி செல்லும்போது, ரேஸ் பைக்கை ஓட்ட ஆர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார். தனது காதலியின் சிறிய ஆசையை நிறைவேற்ற விரும்பிய அசோக் அவருக்கு பைக்கை ஓட்ட கொடுத்துள்ளார். அவரும் பின்னால் அமர்ந்துகொண்டார்.
தீவட்டிப்பட்டி சமத்துவபுரம் அருகே போகும்போது, முன்னால் சென்ற டூவீலர் மீது பைக் மோதி, ஆர்த்தியும் அசோக்கும் கீழே விழுந்துள்ளார்கள். அந்த நேரத்தில் பின்புறமாக வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே ஆர்த்தி இறந்துவிட்டார். இதை எதிர்பார்க்காத அசோக், சம்பவ இடத்திலேயே கதறியழுதார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in