பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய பிரபல நடிகைக்கு சிபிஐ வலைவீச்சு!
பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய பிரபல நடிகைக்கு சிபிஐ வலைவீச்சு!
தமிழில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் 'பிரியாணி'. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் லீனா மரியா பால். பிரியாணியைத் தொடர்ந்து, இந்தியில் ஜான் ஆபிரஹாம் நடித்த மெட்ராஸ் கபே உள்ளிட்ட படங்களிலும் கால் பதித்தார். கொச்சியைச் சேர்ந்த லீனா மரியா பால், அங்கு பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இந்நிலையில், தனது காதலர் சுகாஷ் சந்திரசேகருடன் இணைந்து, சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில், போலி ஆவணம் மூலம், ரூ.19 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர், கர்நாடக அரசுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட லீனா மரியா பால், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால், அதன்பிறகு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனிடையே, ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான சாம்பசிவ ராவிடம், சிபிஐ அதிகாரிகள் என்று கூறி 2 பேர் பணம் பறிக்க முயன்ற சம்பவத்திலும் லீனா மரியா பாலின் பெயர் அடிபட, இதுதொடர்பான விசாரணை தீவிரமடைந்தது.
இது தொடர்பாக சாம்பசிவ ராவ் கொடுத்த புகாரை அடுத்து, விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், மோசடியில் ஈடுபட்டவர்கள் ஐதராபாத்தைச் சேர்ந்த மணிவர்தன், மதுரையை சேர்ந்த செல்வம் ராமராஜன் என்பதை கண்டறிந்தனர். இருவரும் நடிகை லீனா மரியா பால் மற்றும் அவர் காதலர் சுகாஷ் சந்திரசேகர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதை கண்டறிந்தனர்.
மேலும் லீனா மரியா பாலின் சென்னை வீட்டிலும் கொச்சியில் உள்ள பியூட்டி பார்லரிலும் கடந்த மாதம் அதிரடியாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக, சிபிஐ அதிகாரிகள் பலமுறை அழைப்பு விடுத்தும் நடிகை லீனா மரியா ஆஜராகவில்லை என்பதால், அவருக்கு எதிராக, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடாமல் தடுக்க, விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
newstm.in