தீவிரவாதத்தின் மையம்: மீண்டும் சர்ச்சையில் நடிகை கங்கனா ரனவத் !!

தீவிரவாதத்தின் மையம்: மீண்டும் சர்ச்சையில் நடிகை கங்கனா ரனவத் !!

Update: 2022-01-08 09:15 GMT

பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றார். ஆனால், வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்ல முடியாததால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் சென்றார். ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவர் தனது பயணத்தை தொடர முடியாமல் டெல்லி திரும்பினார். அவரது வாகனம் மேம்பாலத்தில் சில நிமிடங்கள் காத்துநின்றன.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிரதமர், குடியரசுத் தலைவரை சந்தித்து பேசி உள்ளார். மத்திய அமைச்சர்கள், மத்தியில் ஆளும் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் அரசு பாதுகாப்பு குறைபாடு இல்லையென விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

அதில், பஞ்சாபில் நடந்தது அவமானகரமானது. பிரதமர் என்பவர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர். மக்களின் குரல். அவர் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்தியரின் மீதான தாக்குதல். ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் கூட. பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களை நாம் இப்போது தடுக்கவில்லை என்றால் தேசம் ஒரு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும், என்று கூறியிருக்கிறார். 

ஏற்கனவே டெல்லியில் போராடிய பஞ்சாப் விவசாயிகளை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு கங்கனா கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Tags:    

Similar News