“சாதி பாகுபாடின்றி பொதுவான மயானங்கள் அமைக்க வேண்டும்”!!
“சாதி பாகுபாடின்றி பொதுவான மயானங்கள் அமைக்க வேண்டும்”!!
தமிழகத்தில் சாதி பாகுபாடின்றி அனைத்து கிராமங்களிலும் அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தினரு மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக்கோரி கலைச்செல்வி, மாலா ராஜாராம் ஆகியோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, அருந்ததியருக்கு மயானம் அமைக்க, தகுதியான நிலத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.மகாதேவன், சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான இடத்தை மயானத்திற்காக மடூர் கிராமத்தில் உரிய இடத்தை கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், தமிழகத்தில் மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அப்புறப்படுத்த வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டார். சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து குடிமக்களும் இந்த பொது மயானங்களை பயன்படுத்த உரிமையுள்ளது என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினார்.
பொது மயானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை ஊக்கத்தொகை மூலம் ஊக்குவிக்க வேண்டும் எனவும் உத்தரவில் வலியுறுத்தியுள்ளார்.
newstm.in