காவல் நிலையத்தில் புகார்.. காதலிக்கு கத்திக்குத்து.. இளைஞர் வெறிச்செயல் !!
காவல் நிலையத்தில் புகார்.. காதலிக்கு கத்திக்குத்து.. இளைஞர் வெறிச்செயல் !!
காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்த இளம்பெண்ணை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் (வயது 24). இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த பாட்டக்குளத்தைச் சேர்ந்த பிரகாஷ் (25) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவரும் காதலித்து ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர்.
கல்லூரி படிப்பு முடிந்த பிறகு இருவரும் வெவ்வேறு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர் வேலைக்கு செல்வதை விரும்பாத காதலன் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்வதாக காதலரிடம் இவர் கூறியுள்ளார். இதில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதற்கிடையே பிரகாஷ் அவரது காதலி வீட்டுக்குச் சென்று சத்தம் போட்டுள்ளார். இதனை தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் பிரகாஷ் மீது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் பற்றி விசாரிப்பதற்காக பிரகாசை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவலர்கள் விசாரணைக்கு வரச் சொல்லி உள்ளனர்.
விசாரணைக்கு வந்த பிரகாஷ் தனது காதலியிடம் சென்று என் மீது புகார் கொடுப்பாயா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலி முதுகில் குத்தி உள்ளார். காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த இடத்தில் காதலியை கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரகாசை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காயமடைந்த பெண் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைக்கு வந்த இடத்தில் பெண்ணை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in