ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி..!

ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி..!

Update: 2021-12-08 22:08 GMT

சென்னை கோடம்பாக்கம் கணபதி அரசு பள்ளியில், தனியார் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 174 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உதவித்தொகை வழங்கினார்.

இதன் பின்னர் அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது: “பாலியல் அத்துமீறல்கள் குறித்து மாணவிகள் துணிந்து புகார் அளிக்க முன்வர வேண்டும். பள்ளிகளில் பார்வை குறைபாடு போன்ற உடல் ரீதியான பிரச்னைகளுக்குத்தான் தற்போது மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உளவியல் ரீதியான மருத்துவர்களாக எப்படி மாற்றலாம் என ஆலோசித்து வருகிறோம். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நல்ல ஆசிரியர் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பள்ளிகளில் புகார் பலகைகள் மற்றும் வகுப்பறைகளில் 14417 மற்றும் 1098 எண் கொண்ட பதாகைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மோதலை எப்படி கையாள வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். ஆசிரியர்கள், மாணவர்களை தாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தும் ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்

புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவோம்.

பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க ஆசிரியர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Similar News