சென்னையில் சர்ச்சை.. குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு..!
சென்னையில் சர்ச்சை.. குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு..!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 17-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
அதுமட்டுமின்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையில், தமிழ்நாட்டில் நடந்த சில அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை என்ற புகார்கள் கடந்த சில மாதங்களாக வைக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக, சென்னை ஐஐடியில் அண்மையில் நடத்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டது.
தமிழ் - சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்ததாக கூறப்பட்டது. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆர்பிஐ சார்பாக நடந்த குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஆர்பிஐ சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ஊழியர்கள் எழுந்து நிற்கவில்லை.
இதை கேட்ட செய்தியாளர்களுடன், ஆர்பிஐ அதிகாரிகள் கோர்ட் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.