பெரியார் குறித்த கருத்து தொடர்பாக எதிர்ப்பு எழுந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் அண்மையில் தியேட்டர்களில் வெளியானது. தற்போது அப்படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படத்தில் சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். அவர் புகைப்படத்தில் ராமசாமி என்று பெயரிடப்பட்டிருந்தது.

இதனிடையே, சமீபத்தில் செல்வராகவன் திரைப்படம் குறித்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில், நீங்கள் ராமசாமி என்று ஒரு தனி நபரை குறிப்பிட்டு தானே பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வராகவன் ஆம் என்று பதில் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் செல்வராகவனுக்கு எதிர்ப்பு எழுந்தது. தந்தை  பெரியார் ஆதரவாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர் வினைகள் வரத் தொடங்கின. இந்நிலையில் தற்போது இது குறித்த விளக்கத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். நெறியாளர் கேட்ட கேள்வி புரியாமல் ஆம் என்று சொல்லி விட்டதாகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு, மன்னிப்பு கோரியுள்ளார் செல்வராகவன்.


newstm.in

Tags: