சமையல் சிலிண்டர் 100 ரூபாய் உயர்வு! ஒரே மாதத்தில் 3 முறை விலை உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சமையல் சிலிண்டர் 100 ரூபாய் உயர்வு! ஒரே மாதத்தில் 3 முறை விலை உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைய், இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சமையல் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்த்தபட்டுள்ளது. இதனால், சிலிண்டரின் விலை 785 ரூபாயில் இருந்து 810 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக கொண்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் பிற்பகுதியில் சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்படும். சில சமயங்களில் மாதத்தின் இடையிலும் மாற்றியமைக்கப்படும்.தற்போது, இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3வது முறையாக சமையல் எரிவாயு சிலண்டர் விலை உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 4ம்தேதி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.25 விலை அதிகரிக்கப்பட்டு ரூ.735 ஆக இருந்தது. அதன் பின்னர், கடந்த பிப்ரவரி 14ம் தேதி மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாய் ஆக உயர்ந்தது. தற்போது 3வது முறையாக உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை 810 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் மீண்டும் உயர்த்தப்படுவது பொதுமக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. ஒரு புறம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில், சிலிண்டர் விலையும் அதிகரித்து வருவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.