வீரர்களை தாக்கிய கொரோனா – வெளியேறிய இந்தியா!!
வீரர்களை தாக்கிய கொரோனா – வெளியேறிய இந்தியா!!
ஆசிய கால்பந்து சம்மேளனம் (ஏஎஃப்சி) நடத்தும் மகளிருக்கான 20ஆவது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்தியா விலகியுள்ளது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, சீனா, சீன தைபே, ஈரான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. தனது முதல் ஆட்டத்தில் ஈரானுடன் கோலின்றி சமன் செய்தது இந்தியா. நேற்று, சீன தைபே அணிக்கு எதிராக விளையாடவிருந்தது.
இந்நிலையில் போட்டியில் விளையாடக்கூடிய எண்ணிக்கையில் வீராங்கனைகள் கைவசம் இல்லாததால் போட்டியிலிருந்து இந்திய அணி விலகியுள்ளது. பல இந்திய வீராங்கனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வீராங்கனைகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. விதிமுறைப்படி ஆட்டத்தில் பங்கேற்க 13 வீராங்கனைகள் இருக்கவேண்டும். ஆனால் 23 பேர் கொண்ட இந்திய அணியில் 11 பேர் மட்டுமே நல்ல உடற்தகுதியுடன் இருந்ததால் சீன தைபேவுடன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து இந்திய அணி எதிர்பாராத விதத்தில் போட்டியிலிருந்து விலகியுள்ளது. இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணியின் மூன்று ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் அணிகள் 2023இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும். இதனால் உலகக் கோப்பைப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும் இந்திய மகளிர் அணி இழந்துள்ளது.
newstm.in