10 மருத்துவர்கள், 15 செவிலியர்களுக்கு கொரோனா.. அச்சத்தில் நோயாளிகள்..!

10 மருத்துவர்கள், 15 செவிலியர்களுக்கு கொரோனா.. அச்சத்தில் நோயாளிகள்..!

Update: 2022-01-20 16:00 GMT

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் 10 டாக்டர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 150 பேரில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செவிலியர் பயிற்சி பள்ளி, அதனுடன் சேர்ந்த விடுதி ஆகியவற்றை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி அதை தற்காலிகமாக மூடி மருத்துவமனை நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதற்கிடையே செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு போதிய முகக்கவசம், கையுறை வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. காரணம் இவர்கள் கொரோனா வார்டு முதல் அனைத்து வார்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.

அப்படி இருக்கும்போது செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு போதிய உபகரணங்கள் வழங்கப்படாத காரணத்தால் தான் கொரோனா நோய் தொற்று பரவி இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு தரமான முகக்கவசம் உள்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே 10 டாக்டர்கள் மற்றும் 15 செவிலியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் அரசு மருத்துவமனை முழுவதும் பரவியதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

அதே சமயம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை கண்டாலே நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பயந்து ஓடும் சம்பவம் அரங்கேறி வருவதால் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Similar News