கொரோனா சேவை தான் முக்கியம்.. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்திய பெண் டாக்டர் !!
கொரோனா சேவை தான் முக்கியம்.. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்திய பெண் டாக்டர் !!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இருப்பதால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை பெண் டாக்டர் ஒருவர் நிறுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பிரபல இருதயவியல் மருத்துவமனையில் அபூர்வா என்ற இளம்பெண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அண்மையில் பெற்றோர் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்து மாப்பிளையை பார்த்து பேசி முடிவு செய்தனர். அதன்படி, இவருக்கு அந்த மாப்பிள்ளையுடன் கடந்த ஏப்ரல் 26 அன்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அவர் தனது திருமணத்தை ஒத்திவைத்து விட்டார்.
மருத்துவரான நான் இப்போது கொரோனா தடுப்பு பணியில் உள்ளேன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பால் தான் எனது தந்தை உயிரிழந்தார். அவரது இழப்பு எனக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக டாக்டர் அபூர்வா தெரிவித்துள்ளார். இதனால், தன்னை போலவே, பல குடும்பங்கள் கொரோனாவால் பல இழப்புகளை சந்தித்து வருவதால், ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு தன்னால் முயன்ற உதவிகள் செய்து வருவாக தெரிவித்துள்ளார்.
தற்போது, மருத்துவ ஆலோசகராக இருப்பதால், எனக்கு ஒரு நாளைக்கு பல தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. என்னிடம் மக்கள் விரக்தியுடனும், கோபத்துடனும் பேசுகிறார்கள். எனினும் நான் அவர்களுக்கு பொறுமையுடன் உகந்த பதிலை அளித்து தீர்வுகாண பாதை அமைத்துகொடுப்பதாகவும் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், கொரோனாவின் இரண்டாவது அலையால், மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. இந்த கடினமான நேரத்தில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், வென்டிலேட்டர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ள இந்த நேரத்தில் எனக்கு திருமணம் தேவையா? என்று எனக்குள் கேள்விகள் எழுந்தன என குறிப்பிட்டார்.
அதனால், எனது திருமணத்தை குறிப்பிட்ட நாளில் செய்து கொள்ள விரும்பவில்லை. எனது திருமணம் நடந்த அடுத்த நாள் 20 முதல் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. இதைப் பற்றி என் குடும்பத்தில் தெரிவித்துவிட்டேன். என்னுடைய அம்மா, சகோதரி, மணமகன் குடும்பத்தினர் ஆகியோர் எனது முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று இளம் டாக்டர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
newstm.in