தலைமைச் செயலருக்கு கொரோனா.. அரசு வட்டாரத்தில் பரபரப்பு..!

தலைமைச் செயலருக்கு கொரோனா.. அரசு வட்டாரத்தில் பரபரப்பு..!

Update: 2022-01-14 17:49 GMT

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தலைமைச் செயலர் மற்றும் 20 டாக்டர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில தலைமைச் செயலர் அஸ்வனி குமாருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தன. இதைத்தொடர்ந்து அவருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு டாக்டர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் அரசு செயலர் ரவிப்பிரகாஷ், சப்- கலெக்டர் தமிழ்ச்செல்வன், வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி உள்ளிட்டோரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைமைச் செயலர் அஸ்வனி குமார் நேற்று முன்தினம் தேசிய இளைஞர் விழா தொடக்க நிகழ்ச்சியில் கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துகொண்டார். இந்நிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி குடும்ப நலத்துறை இணை இயக்குனர் ஆனந்த லட்சுமி உட்பட அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Similar News