நீதிமன்றம் மறுப்பு.. நடிகை சுல்தானாவுக்கு நீடிக்கும் சிக்கல் !!

நீதிமன்றம் மறுப்பு.. நடிகை சுல்தானாவுக்கு நீடிக்கும் சிக்கல் !!

Update: 2021-07-03 08:45 GMT

இந்தியாவின் ஆட்சியின் கீழ் வரும் லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா படேல் அண்மையில் நியமிக்கப்பட்டார். இவர், அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும், மாற்றங்கள் என்ற பெயரில் தவறான முடிவுகளை அமல்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அவரை மத்திய அரசு திரும்பபெறக்கோரி  அங்கு மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில், லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும் தயாரிப்பாளருமான ஆயிஷா சுல்தானா, டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது லட்சத்தீவில் கொரோனா பரவுவதற்கு மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவதாக பேசினார். லட்சத்தீவு நிர்வாக அதிகாரிக்கு எதிரான இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் ஆயிஷா சுல்தானா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியதுடன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆயிஷா சுல்தானாவுக்கு உத்தரவிட்டது. அதன்படி லட்சத்தீவில் ஏற்கனவே போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் ஆயிஷா சுல்தானா.

இதனிடையே, ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு தவறானது மற்றும் நியாயமற்றது என்று கூறி, லட்சத்தீவில் உள்ள பல பா.ஜனதா தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் தன் மீதான தேசத்துரோக வழக்கின் விசாரணைக்கு தடைகோரி ஆயிஷா சுல்தானா, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் மேனன், தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். 

விசாரணை துவக்க நிலையில் இருப்பதால், விசாரணை அமைப்புகளுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது நடைபெற்று வரும் விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி லட்சத்தீவு நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

newstm.in

Tags:    

Similar News