சுனாமி தாக்கும் அபாயம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..!
சுனாமி தாக்கும் அபாயம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..!
அண்டை நாடான பாகிஸ்தான் அதிக நிலநடுக்க பாதிப்புகள் ஏற்படக் கூடிய பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பாகிஸ்தானில் 4,039 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இதேபோன்று சுனாமி, புயல்கள் மற்றும் கனமழை போன்ற பாதிப்புகளும் அதிகம் ஏற்படக் கூடிய நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த 1945-ம் ஆண்டு பாகிஸ்தானின் கடலோரம் மற்றும் ஈரான், இந்தியா மற்றும் ஓமன் நாடுகளை சுனாமி தாக்கியதில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.
இந்நிலையில், பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம், ஐ.நா. வளர்ச்சி திட்டத்துடன் இணைந்து நடத்திய நிகழ்வில் அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, ‘பாகிஸ்தானில் சுனாமி பேரிடர் ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளது. குவாடர் துறைமுகம் மற்றும் அந்த நகரம் சுனாமியால் நீரில் மூழ்கக் கூடும்.
கராச்சி நகரில் ஒன்று முதல் 2 கி.மீ. வரையிலான கடலோரப் பகுதிகள் பாதிப்படையக் கூடும். அதுபோல், சிந்து கடலோரப் பகுதியும் சுனாமி அச்சுறுத்தலுக்கான இலக்காக உள்ளது’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.