டெல்லி வன்முறையில் பலி 20ஆக உயர்வு.. போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் திணறல்!!
டெல்லி வன்முறையில் பலி 20ஆக உயர்வு.. போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் திணறல்!!;
டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப வேண்டுமென்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அதே இடத்தில் அச்சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு தரப்பினர் பேரணியில் ஈடுபட்டனர். அவர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு டெல்லியில் 3-ஆவது நாளாக நேற்றும் வன்முறைகள் தொடர்கிறது.
இதைத்தொடர்ந்து வன்முறைகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரே நாளில் 3 முறை ஆலோசனைகள் நடத்தினார். எனினும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையில் டெல்லி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கான சிறப்பு ஆணையராக சிஆர்பிஎஃப்பை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என்.ஸ்ரீவஸ்தவாவை உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி கலவரத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ராணுவத்தை களம் இறக்க வேண்டுமென்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ள கெஜ்ரிவால், பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
newstm.in