காதலால் இணைந்த ஜோடி மதத்தால் பிரிந்ததா?
காதலால் இணைந்த ஜோடி மதத்தால் பிரிந்ததா?
2015-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் டீனா டாபி முதலிடம் பெற்றார். அதுவும் முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் பட்டியலினப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். அதே தேர்வில் காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த அதார் அமீர் கான் இரண்டாவது இடம் பெற்றார்.
முசோரியில் லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் ஐஏஎஸ் பயிற்சியின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இருவரின் காதல் கதையும் சினிமா கதைக்கு சவால் விடுவது போல் இருந்தது. அதார் கான் ஓர் இஸ்லாமியர், டீனா டாபி இந்து என்பதே இவர்கள் மீது தேசிய அளவில் கவனம் பெற்றது. இவர்களது காதலுக்கும் திருமணத்துக்கும் எதிராக குரல் எழும்பியது. இந்து மகாஜன் சபா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தது.
அத்தனை எதிர்ப்புக் குரல்களையும் புறந்தள்ளி இந்த ஜோடி கடந்த 2018-ல் கரம் பிடித்தன. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, ஒன்றிய அமைச்சர்கள, மக்களவையின் அப்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால், இந்தத் தம்பதி கடந்த நவம்பர் மாதம் ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இருவரும் மனமுவந்து ஒருமித்து விவாகரத்து கோரியதால் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
சாதி, மத எதிர்ப்பு என எதுவும் அசைக்காத காதல், திருமணத்தில் முடிந்து பின்னர் எதனால் முறிந்தது என்ற காரணம் வெளியாகவில்லை. இவர்கள் திருமண முறிவுக்கு சமூக வலைதலத்தில் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டீனா டாபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீங்கள் என்ன செய்தாலும் யாரேனும் சிலர் உங்களைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அதனால், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி சேர்க்கும் விஷயங்களையும் செய்யுங்கள். வாழ்க்கையை வாழுங்கள்” என்று பதிவிட்டு உள்ளார்.