கலாம் 2வது முறை ஜனாதிபதி ஆவதை தடுத்தது திமுக; பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..!
கலாம் 2வது முறை ஜனாதிபதி ஆவதை தடுத்தது திமுக; பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..!;
அப்துல் கலாம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்; விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவதை திமுக தடுத்துவிட்டது” என, பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “அப்துல்கலாம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்; விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவதை திமுக தடுத்துவிட்டது.
அதிமுக - பாஜக கூட்டணியில் இருக்கிறது. அதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் டில்லி சென்று பிரதமரை சந்தித்தனர். அதற்கு உரிமை உண்டு. ஆனால், உட்கட்சி விவகாரத்தில் தலையீடு செய்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது அரசியல் காழ்ப்புணர்ச்சி. அதை நீதிமன்றத்தில் எதிர் கொள்வார்கள்.
மீனவர் சட்ட மசோதாவில் குறைகள் இருந்தால் பாஜக கவனத்தில் கொள்ளும். மீனவர்கள் கோரிக்கைக்காக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக கவர்னர் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை. தமிழக காங்கிரஸ் அரசியல் ரீதியாக இதுபோல் குற்றச்சாட்டுகளை வைக்கிறது.
தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர். இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை முன்னேற்றி இருக்கிறோம். ஆனால் திமுகவில் இதுபோல் இல்லை. சிலரை வளர விடுவதில்லை” எனத் தெரிவித்தார்.