“வஞ்சக வலையில் சிக்கிக் கொள்ளக்கூடாது..!” - தமிழக அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்

“வஞ்சக வலையில் சிக்கிக் கொள்ளக்கூடாது..!” - தமிழக அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்

Update: 2021-07-05 12:33 GMT

“தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது” என, பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது. இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும். இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட வராது. இதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.

காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நேர்மையும், அறமும் எத்தகையது என்பதை கடந்த காலங்களில் நாம் கற்ற பாடங்கள். எனவே, எடியூரப்பா விடுத்துள்ள அழைப்பை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை நடத்தி காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News