இந்த திட்டம் வேண்டாம்.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் கடிதம் !

இந்த திட்டம் வேண்டாம்.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் கடிதம் !

Update: 2021-12-09 05:25 GMT

2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில், பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, உத்தேசித்திருக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவு கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது.
மின்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவே இந்தத் திருத்தங்களைக் கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தச் சட்டத்தில் சொல்லப்படும் பல திருத்தங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மேலும், இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வரக் கூடாது என போராட்டங்களும் நடைபெற்றன. 

இதனிடையே, நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் இந்த சட்டத் திருத்தத்தை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில், புதிய சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத் திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத் துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் உள்ளது. மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாக உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். எனவே, இந்த சட்டத் திருத்த முன்வடிவினை திரும்பப் பெறுமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். 

ஏற்கனவே 2014 மற்றும் 2018ஆம் ஆண்டிலும் இதேபோன்ற திருத்தங்களை சட்டம் மூலமாகக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மாநில அரசுகளும், மின் வாரியங்களின் உறுப்பினர்களும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்ததால் அவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

newstm.in

Similar News