இன்றைய கூகுள் டூடுலின் சிறப்பு என்ன தெரியுமா ?
இன்றைய கூகுள் டூடுலின் சிறப்பு என்ன தெரியுமா ?
கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியால் இந்தியாவின் முதல் பெண் விமானி ஆன சரளா தாக்ரலின் 107வது பிறந்த நாள் இன்று; இதையொட்டி, அவரை கவுரவிக்கும் விதமாக சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள்.
சரளா தாக்ரல், பிரிட்டிஷ் இந்தியாவின் டெல்லியில், 1914-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிறந்தார். அதன் பின்னர் இவருடைய பெற்றோர் இன்றைய பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு குடிபெயர்ந்தனர். லாகூரில், தனது 16-வது வயதில் பி. டி.ஷர்மா என்பரை மணந்தார் சரளா.
பி.டி.ஷர்மா குடும்பத்தினருக்குச் சொந்தமாக ‘ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி’ என்ற விமான நிறுவனம் இருந்தது. பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும் இடையே அந்நிறுவனம் தன் பயணச் சேவையை நடத்தி வந்தது. அந்நாட்களில், சரளாவின் கணவர் குடும்பத்தில் 9 பேர் விமானியாக இருந்தனர்.
இந்தியாவில் முதன் முதலில் ஏர்மெயில் விமானியாக உரிமம் வாங்கியவரும் இவரது கணவர் பி. டி.ஷர்மாதான். அவர், கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில் பறக்கும் விமானத்தின் விமானியாக பணிபுரிந்து வந்தார்.
சரளாவையும் விமானி ஆக்குவதில் அவரது கணவரும், கணவரின் தந்தையும் ஆர்வமுடன் இருந்தனர். ஷர்மாவின் தந்தை, சரளாவை லாகூர் ஃப்ளையிங் கிளப்பில் சேர்த்து டிம்மி தஸ்த்தூர் என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார். அவர், சரளாவிற்கு 8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு, தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார்.
1936-ம் ஆண்டு, தனது 21வது வயதில், கணவர் அனுமதியுடன் ஜிப்சி மாத் என்ற சிறுவகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார். இதன்போது அவர் விமானிக்கான ஆடை அணியாமல், வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாக பறந்தார்.
அதன் பிறகு, லாகூர் ஃப்ளையிங் கிளப் விமானம் ஒன்றில் ஆயிரம் மணி நேரம் வெற்றிகரமாக விமானத்தை இயக்கி, 1936-ம் ஆண்டு பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்’ பெற்றார். பிறகு தொழில் முறை விமானியாக பிரிவு ‘பி’ விமானி உரிமம் பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக தடைபட்டது.
ஆனாலும், விடாது மீண்டும் சுதந்திர இந்தியாவில் தனது பயிற்சியைத் தொடர்ந்த சரளா தொழில் முறை விமானி உரிமம் பெற்றார். அதன்பிறகு, ராஜஸ்தான் ஆல்வாரின் அரசியின் விமானத்தின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக 1948ம் ஆண்டு பணியேற்று, ஆறுமாதங்கள் அப்பணியில் நீடித்தார்.
பெண்கள் சாதிக்காத துறையே இன்றைக்கு இல்லை; ஆனால், அந்த சாதனை அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. கடும் உழைப்பும், முயற்சியும் தேவைப்பட்டிருக்கிறது. அப்படி சாதித்து, 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி மரணம் அடைந்த இந்தியாவின் முதல் பெண் விமானியான சரளா தாக்ரலின் 107-வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி, அவரை கவுரவிக்கும் விதமாக சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள்.