புதுவையில் இரட்டைக் கொலை.. பாஜக பிரமுகர் கைது.. ரகசிய இடத்தில் வைத்து விசாரணை..!
புதுவையில் இரட்டைக் கொலை.. பாஜக பிரமுகர் கைது.. ரகசிய இடத்தில் வைத்து விசாரணை..!
புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாம் ரவி (33). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் இருந்தன.
இந்நிலையில், ஜாமீனில் வெளியே இருந்து வந்த பாம் ரவி கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி தனது நண்பர் அந்தோணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாட்டு வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் வெட்டி இருவரும் கொலை செய்யப்பட்டனர்.
ரவுடி திப்லான் கொலைக்கு பழிக்குப் பழியாக நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பாம் ரவி கொலை வழக்கில், வாணரப்பேட்டையை சேர்ந்த பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் என்பவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து புதுவை முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அவரை, போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் அவருக்கு எந்த வகையில் தொடர்பு என்பது குறித்து துருவி துருவி விசாரணை நடந்து வருகிறது.