நெல்லை விபத்து எதிரொலி.. பள்ளிகளுக்கு செம கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட தமிழக அரசு !
நெல்லை விபத்து எதிரொலி.. பள்ளிகளுக்கு செம கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட தமிழக அரசு !
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
நெல்லை பொருட்காட்சி திடல் அருகே அமைந்துள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில், கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நான்கு மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ நேரத்தின் போது 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டதாகவும், சுமார் 30 மாணவர்கள் கழிவறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சுவர் இடிந்து விழுந்தவுடன் மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.
கட்டட விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தி.மு.க., தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயம் அடைந்த மாணவர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது: நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
விபத்து குறித்து விளக்கம் அளிக்க பள்ளி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பழைய கட்டடங்கள் உள்ள பள்ளிகளுக்கு அங்கு குழந்தைகளை அனுமதிக்காதீர்கள் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படியே பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்தார். அதன்படி மாவட்ட வாரியாக மாவட்ட அட்சியர், கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
newstm.in