EMI செலுத்துவதில் பிரச்னை.. பைனான்ஸ் நிறுவனத்தில் அரிவாளுடன் வந்து மிரட்டல்..!
EMI செலுத்துவதில் பிரச்னை.. பைனான்ஸ் நிறுவனத்தில் அரிவாளுடன் வந்து மிரட்டல்..!
தேனி மாவட்டம் கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகில் இருக்கும் தனியார் பைனான்ஸ் நிறுவனம் மூலம் மாத தவணைக்கு டிவியும் ஹோம் தியேட்டரும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த மாதம் மாதத்தவணை உரிய நேரத்திற்கு செலுத்தாததால் பஜாஜ் பைனான்சில் வசூல் செய்யும் வசூல்தாரர்கள் கண்ணனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பணத்தை கட்ட கூறி உள்ளனர்.
அப்போது இவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் அரிவாளுடன் பைனான்ஸ் அலுவலகத்திற்குள் சென்று போனில் பேசியவரை கேட்டு அலுவலகத்திற்குள் இருந்த கணினி, மேசை உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார். மேலும் அலுவலக ஊழியர்களை தாக்க முயன்றார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோ காட்சியில் கையில் அரிவாளுடன் நுழையும் தொழிலாளி, ‘‘ஏடிஎம் கார்டை செக் பண்ணுடா... எனது மனைவியை அவதூறாக பேசியது எவன்டா’’ என கோபத்துடன் தகாத வார்த்தைகள் பேசியபடி, அரிவாளை வைத்து ஊழியர்களுடன் தகராறு செய்து மிரட்டுவது போல் இருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. பட்டப்பகலில் அரிவாளுடன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in